ஆண்டியின் பிறந்த நாளிற்கு தீபம் ஏற்றி கொண்டாடிய பக்தர்கள்...

ஆண்டியின் பிறந்த நாளிற்கு தீபம் ஏற்றி கொண்டாடிய பக்தர்கள்...

பழனி கோவிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா நாளையொட்டி ஏராளனமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வருகையை ஒட்டி மலைக் கோவிலுக்கு சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 

நாடுமுழுவதும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் பழனி கோவிலில் அதிகரித்துள்ளது. திருக்கார்த்திகை முன்னிட்டு பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்லும் படிப்பாதைகளில் ஒவ்வொரு படிகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியபடியே மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். 

இந்நிலையில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தந்துள்ளதால் பக்தர்கள் நலன்கருதி பழனி மலைக்கோவிலுக்கு படிப்பாதையில் பக்தர்கள் மேலே செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

தரிசனம் செய்த பின்பு கீழே வரும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியே அடிவாரத்திற்கு வரும் வகையில் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப் படுகின்றனர். பக்தர்கள் வருகையை ஒட்டி பழனி கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.