கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்வு...! விவசாயிகள் மகிழ்ச்சி ...!!

கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்வு...! விவசாயிகள் மகிழ்ச்சி ...!!

மேற்கு தொடர்ச்சி மலையில் மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பிப்ரவரி மாத துவக்கம் முதல் மழை பெய்யாத நிலையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து மார்ச் மாத துவக்கத்தில் 30 அடியாக குறைந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததால் அணையின் நீர் முழுவதும் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அணையில் இருந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 57 அடியாக இருந்த நிலையில் அணைக்கு முற்றிலும் நீர் வரத்து இல்லாமல் போனது.  இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அகமலை, கண்ணக்கரை,  உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து துவங்கியது. இதனை தொடர்ந்து அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் 56 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களில்  நீர் மட்டம் 10 அடி உயர்ந்து இன்று  காலை நிலவரப்படி 66.58 அடியாக  நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதில் அணையில் இருந்து குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும்  படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?