கல்வி மாவட்ட அலுவலகத்தை காலி செய்வதற்கு எதிர்ப்பு...! வாகனத்தை மறித்து போராட்டம் நடத்திய விசிகவினர்...!

கல்வி மாவட்ட அலுவலகத்தை காலி செய்வதற்கு எதிர்ப்பு...! வாகனத்தை மறித்து போராட்டம் நடத்திய விசிகவினர்...!

திருச்செந்தூர் கல்வி மாவட்டம் 2018-ல் உருவாக்கப்பட்டது. இதன் கீழ் 16 அரசு பள்ளிகளும், 49 உதவி பெறும் உயர்நிலை, மற்றும் மேல்நிலை பள்ளிகளும் செயல்பட்டு வந்தன. சுமார் 940 ஆசிரியர்கள் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை, தூத்துக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்க கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், விசிகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருச்செந்தூரில் செயல்பட்டு வந்த கல்வி மாவட்டம் இடமாற்றம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. அந்த வகையில், அலுவலக கோப்புகளை லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வந்த போது லாரியை மறித்து விசிகவின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் தலைமையில் விசிகவினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மக்கள் நலன் காக்கும் இயக்கத்தை சார்ந்த திருப்பதி, பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர், திருப்பதியிடமிருந்து பெட்ரோல் கேனை வாங்கி அவரை அழைத்து சென்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.