பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு...

சென்னையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு...

சென்னை | அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் காவிச் சட்டை அணிந்த அம்பேத்கரின் படம் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் காவித் தலைவனின் புகழைப் போற்றுவோம் என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.

அதன் தொடர்ச்சியாக நேற்று அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தார்.

அப்போது அங்கிருந்த விசிக கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விசிக-வினர் அர்ஜுன் சம்பத் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டு அர்ஜுன் சம்பத் மீது செருப்பு, பாட்டில், கற்களை வீசியடித்தனர்.

மேலும் படிக்க | அம்பேத்கரின் கோட்டு சூட்டும்.. அதை பற்றிய காந்தியின் கணிப்பும்..!

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அர்ஜுன் சம்பத்தை மீட்டு பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விசிக-வினரை போலீசார் கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் அடைத்து பின் விடுவித்தனர்.

இச்சம்பவம் தொட்ர்பாக வன்னியரசு உட்பட 20 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கேட்காமல் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அர்ஜுன் சம்பத் மீதான தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு காவித் துண்டு அணிவித்து போராட்டம் நடத்தப்படும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. அதன் தொடர்ச்சியாக சென்னை முழுவதும் உள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மதவாத பித்தர்களை கைது செய்ய வேண்டும் - தொல். திருமாவளவன்