‘ அனுமன் ஜெயந்தி ’ வடை மாலை அலங்காரத்தில் காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்..!

‘ அனுமன் ஜெயந்தி ’ வடை மாலை அலங்காரத்தில் காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்..!

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது.

மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில், அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். இந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஜெயந்தி விழாவான இன்று நாமக்கல் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு பின்னர் மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர், பால், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து  ஏராளமானோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசித்து வருகின்றனர். இரவு 10 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் சன்னதி முழுவதும் 2 டன் எடையுள்ள பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் இது 2 வது ஜெயந்தி விழா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க :  ‘ சென்னை பஸ் ஆப் ’ மாநகர பேருந்துகளுக்கு மட்டுமல்ல...இனி விரைவு பேருந்துகளுக்கும்...