” தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு: ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும்” - தமிழக அர்சுக்கு நீதிமன்றம் உத்தரவு.

” தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு   20 %  இட ஒதுக்கீடு: ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும்” - தமிழக அர்சுக்கு நீதிமன்றம் உத்தரவு.

அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பத்தை ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 காலியாக உள்ள 1021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று  மருத்துவ  பணிகள் தேர்வு வாரியம், 2022-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி உதயக்குமார், செல்வவேல், முனீஸ்வரி உள்ளிட்ட 17 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், ” அனைவரும் பள்ளிப்படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் படித்துள்ளதாகவும்,  குறிப்பிட்ட பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி வரை தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு தமிழ் வழியில் நடத்தப்படுவதில்லை”, என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதேசமயம் , ”ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் படிப்புகளை கல்வித்தகுதியாக கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரி, மருந்தாளுனர், இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடங்களுக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதால், தங்களுக்கும் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்ற மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்”,  என்றும் மனுவில் கோரியுள்ளனர்.

மேலும், தங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் வரை, 1021 அரசு மருத்துவர்கள் பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு  தடைவிதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் எஸ். தங்கசிவன் ஆஜராகி, 1021 மருத்துவர்கள் நியமனத்திற்கு முன்பாக தங்கள் விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்டு, புதிதாக ஒரு வாரத்தில் அரசுக்கு விண்ணப்பம் அளிக்கும்படி மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதை ஒரு மாதத்தில் பரிசீலித்து சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிக்க   | "என்.எல்.சி. விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் பதிலளிக்க வேண்டும்" அன்புமணி வலியுறுத்தல்!!