பொறியியல் சேர்க்கை; தொடங்கியது 2ஆம் கட்ட கலந்தாய்வு!

பொறியியல் சேர்க்கை; தொடங்கியது 2ஆம் கட்ட கலந்தாய்வு!

பொறியியல் இளங்களை பட்டப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில்  பொறியியல் படிப்புகளில் சேர பொது கலந்தாய்வு கடந்த ஜூலை 28 ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் முதல் மூன்று நாட்கள் 11 ஆம் தேதி வரை மாணவர்கள் விருப்ப கல்லூரிகளை உள்ளீடு செய்ய கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இதில் 176.99 முதல் 142.00 வரை கட் ஆப் மதிப்பெண் வைத்திருப்பவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கல்லூரிகளை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக நான்கு  கட்டங்களாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு இவ்வாண்டு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2, 19,346 இடங்களில்   ஒற்றைச் சாளர முறையில்  1,60,783 கலந்தாய்வின் மூலம் நிரப்பட உள்ளது. அதேபோல்  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான  7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ்  12,059 இடங்களும் , தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3,143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையும் படிக்க:தரமற்ற மருந்துகள்; 143 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!