"இதெல்லாம் ஒரு அரசாங்கமா" விரக்தியில் சான்றிதழ்களை சட்டப்பேரவையில் வீசிய வாலிபர்!

"இதெல்லாம் ஒரு அரசாங்கமா" விரக்தியில் சான்றிதழ்களை சட்டப்பேரவையில் வீசிய வாலிபர்!

புதுச்சேரியில் வாலிபர் ஒருவர் தான் படித்த படிப்புக்கு அரசு துறைகளில் எந்த வேலையும் கிடைக்கவில்லை என  ஆத்திரத்தில் தனது சான்றிதழ்களை சட்டபேரவை வளாகத்திற்குள் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (29), இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பதக்கம் வென்றுள்ளார். இவர் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியில் இருந்த சத்தியராஜ், இன்று காலை சட்டப்பேரவை வளாக வாயிலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து தன்னுடைய 12ஆம் வகுப்பு மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றை சட்டப்பேரவைக்குள் வீசி எறிந்தார். பின்னர் இதெல்லாம் ஒரு அரசாங்கமா என ஆத்திரத்துடன் கூச்சலிட்ட அவரை பேரவை காவலர்கள் அவருடைய சான்றிதழை எடுத்துக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

பின்னரும் அவர் கலைந்து செல்லாமல் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் சபை காவலர்கள் பெரியக் கடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாலிபர் ஒருவர் சட்டப்பேரவை வாயிலில் தனது சான்றிதழ் தூக்கி எறிந்து கூச்சலிட்ட சம்பவம் பேரவை வளாக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க:டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!