"தமிழ்நாட்டு வேலை வாய்ப்பில் 50% பெண்கள்" டிஆர்பி ராஜா தகவல்!

"தமிழ்நாட்டு வேலை வாய்ப்பில் 50% பெண்கள்" டிஆர்பி ராஜா தகவல்!

இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 50% பெண்கள் தமிழ்நாட்டில் பணி புரிகின்றனர் என தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.

அரியலூர் அரசு சிமெண்ட் தொழிற்சாலை சார்பில் ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை மாநில தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டனர்.
அப்போது அரசு சிமெண்ட் தொழிற்சாலை அலுவலர்களுடன் தொழிற்சாலையின் செயல்பாடு, உற்பத்தி திறன், விற்பனை, சுண்ணாம்புக்கல் சுரங்கங்களின் எண்ணிக்கை, சுண்ணாம்பு கற்களின் தரம், சுரங்கத்திற்காக வாங்கப்பட்டுள்ள நிலங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில்,  "தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகள் பயன்படுத்தி தற்போது காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடி, பசுமை காடுகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும். சுரங்கம் உள்ள பகுதிகளில் எந்தெந்த வகையான மரங்கள் வளரும் என்பதை அறிந்து அவ்வகையான மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாய குடும்பத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் எனக்கூறிய அவர், அரசு சிமெண்ட் ஆலை உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் அந்தந்த பகுதியில் உள்ள படித்த தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். படித்த இளைஞர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இத்திட்டத்தின் மூலம் இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பெரம்பலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கக்கூடிய உற்பத்தி தொழிற்சாலைகள் அமைய உள்ளதாகவும், இப்பகுதியில் தைவான் நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,  ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்திய அளவில் தொழில் துறையில் 13-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது முதலாவது இடத்தில் உள்ளதாக கூறிய அவர்,  தொழில் தொடங்குவதற்கு சாதகமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளதாவும்  இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் 50% பெண்கள் தமிழ்நாட்டில் பணி புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி ஸ்வர்னா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா நீக்கம்.. தகராறுக்கு பின்னணியில் அரசியலா?