சின்னத்திரையில் இருந்து சினிமாத்துறை சென்ற நடிகைகள்.....

சினிமாதுறையில் வலம் வரும் சின்னத்திரை கதாநாயகிகளை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு

சின்னத்திரையில் இருந்து சினிமாத்துறை சென்ற நடிகைகள்.....

சினிமா மோகம் என்பது அனைத்து மக்களுக்கும் இருக்கும் ஒன்று,  திரையில் தோன்றிவிட வேண்டும் என்ற ஆசை ஒரு முறை கூட வராத நபரே இருக்கமுடியாது அந்த அளவிற்கு சினிமா ஈர்க்கும் தன்மையை கொண்டது. பொதுவாகவே ஒரு மனிதன் பிறரின் கவனத்தை தன் மீது திருப்பவேண்டும் என்ற நோக்கத்திலேயே அதிகம் செயல்படுவான். சினிமா போன்ற ஒரு துறை பெரும்பாலானோரின் கவனத்தை ஒட்டுமொத்தமாக எளிதில் ஈர்த்து ஒருவரை பிரபலமாகும் என்பதால், அதன் மீது ஆசை வைப்பவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராமில் ரீலிஸ், டிக் டாக் வீடியோ போன்றவற்றை செய்யும் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு மூலையில் நடிகராக வேண்டும் என்ற ஆசை ஒளிந்திருக்கும்.

ஆனால் அந்த ஆசை அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. அப்படி சாத்தியப்படுவதற்கு, கைத்திரையில் இருந்து சின்னத்திரை பின்பு வெள்ளித்திரை என்று படிப்படியாக முன்னேற வேண்டியுள்ளது அப்படி முன்னேறினாலும் வெகு சிலருக்கே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பும் கிட்டுகிறது. அப்படி  சின்னத்திரையில் தோன்றி பின்பு வெள்ளித்திரைக்கு அதாவது டிவி தொகுப்பாளர்களாக இருந்து அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்து, பிரபலமான நடிகைகள் பலர் உள்ளனர் அந்த வகையில் தங்களின் அழகிய தமிழ் உச்சரிப்பால் மக்களின் மனங்களை கவர்ந்த டிவி சேனல் செய்திவாசிப்பாளர்கள் பலர் திரைத்துறையில் நுழைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது, இப்படி செய்திவாசிப்பாளர்களாக இருந்து நடிகையான தமிழ் பிரபலங்கள் யார் என்பதைத்தான் இந்த பட்டியலில் பார்க்கப்போகிறோம். 


ஃபாத்திமா பாபு 

90'ஸ் கிட்ஸ்சுகளுக்கு செய்திவாசிப்பாளராக தெரிந்த ஃபாத்திமா பாபு 2கே கிட்ஸ்சுகளுக்கு பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக தான் தெரியும். கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக டிடி பொதிகை உட்பட  பல்வேறு சேனல்களிலும் செய்திவாசிப்பாளராக இருந்தவர் பல சீரியல்களிலும் நடித்துள்ளார். கல்கி படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்த இவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில தென்னிந்திய மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

உமா பத்மநாபன் 

சன் டிவியில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த உமா பத்மநாபன், ஜெயா டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு லூட்டி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன் பிறகு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தின் மூலம் நடிகையாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். பல டிவி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ள உமா, பல படங்களில் சில சிறிய வேடங்களில்  நடித்து வந்த இவர் தற்போது சன் டிவியில் சித்தி 2 சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

பிரியா பவானிசங்கர் 

புதிய தலைமுறை சேனலில் செய்திவாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய பிரியா பவானிசங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை  என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அந்த நாடகத்தில் அவருக்கு கிடைத்த பெயரை கொண்டு மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரியானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே, பிளட் மணி என வரிசையாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராகியுள்ளார், தற்போதும் தனுஷின் திருச்சிற்றம்பலம், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட 9 படங்களில் நடித்து வருகிறார்.

லாஸ்லியா 

இலங்கை தமிழ் டிவி சேனலில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா இடையேயான காதல் விவகாரம் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை தேடி தந்தது. பிக்பாஸிற்கு பிறகு விளம்பரங்களில் நடித்த லாஸ்லியா, ஃபிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்ததன் மூலம் ஹீரோயின் ஆகி உள்ளார். இந்த படம் பெருமளவில் போகவில்லை என்றாலும் அதைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

ஷிவானி நாராயணன்

விஜய் டீவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் பிக் பாஸ் சீசன் 4இல் பாலா கேங்குடன் சேர்ந்து கைக்கூலியாக திரிந்து தனித்தனிமையை இழந்து 98வது நாளில் ஏவிக்ட் ஆகிவிட்டார் இருந்தும் இணையத்தில் கவர்ச்சியாக நடனமாடி பல வீடியோக்களை பதிவிட்டு வந்ததால் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்துவந்தார். இந்த பிரபலத்தின் காரணமாக தற்போது கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதுமட்டுமின்றி இவருக்கு இன்னும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

சரண்யா துரைசுந்தர்ராஜ் 

புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை நடிகையானவர்களில் ஒருவர் சரண்யா துரை சுந்தரர்ராஜ். ஆயுத எழுத்து சீரியல் மூலம் நடிகையான சரண்யா, அதனை தொடர்ந்து \ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, போன்ற சில படங்களிலும் நடித்தார், அந்த படங்கள் பெரிதாக மக்களின் கவனத்தை ஈர்க்க தவறியதனால் தற்போது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

அனிதா சம்பத் 

சன் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், மீம் கிரீடோர்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார் இதனால் கிடைத்த புகழால் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் சிறிய ரோலில் நடித்து, நடிகையானார். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பலரின் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் தற்போது பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார் என்று செய்தி பரவி வருகிறது.