19 வருட கனவு தற்போது நனவானது... நடிகர் ஜெய் நெகிழ்ச்சி

நடிகர் ஜெய்யின் ”இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற 19 வருட கனவு தற்போது  ‘காட முட்ட’என்கிற பாடல் மூலம் நனவாகி உள்ளது” என நெகிழ்ச்சியுடன்  தெரிவித்துள்ளார். 

19 வருட கனவு தற்போது  நனவானது... நடிகர் ஜெய் நெகிழ்ச்சி

கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பகவதி’ படம் மூலம் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய்.

இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார்.தற்போது பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி, குற்றமே குற்றம், சிவ சிவா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதுவரை சுமார் 25 படங்களில் நடித்துள்ள ஜெய், தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சிவ சிவா’ படத்துக்கு நடிகர் ஜெய் முதன் முறையாக இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் இசையமைத்துள்ள ‘காட முட்ட’ என்கிற பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை, அனல் ஆகாஷ் பாடியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஜெய் கூறியபோது, “ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தேன். எதிர்பாராத விதமாக நடிகர் ஆனேன். இருப்பினும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எனது 19 வருட கனவு தற்போது நனவாகி உள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். .