"முருகன் மெஸ் சாப்பாடு அருமை" தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளிய ராஜமௌலி!!
தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திரைப்பட இயக்குநர் ராஜமௌலி, சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் பிரமாண்ட திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ராஜ மௌலி, தனது பரபரப்பான வேலை நேரங்களுக்கு நடுவில், தனது குடும்பத்தினருடன், தமிழ் நாட்டில் சாலை வழியாக சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தை முடித்தப் பின்பு, அந்த பயணம் எவ்வாறு அமைந்தது என, தனது ட்விட்டர் பக்கத்தில், புத்துணர்ச்சியுடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நீண்ட நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சாலை வழியாக பயணம் மேற்கொள்ள எண்ணிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, கோவில்களுக்கு செல்லலாம் என, எனது மகள் விரும்பியதால், அவ்வாறே செய்ய முடிவெடுத்தோம். அதற்கு எனது மகளுக்கு தான் நன்றி கூற வேண்டும். ஜூன் மாத இறுதியில், ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோவில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தோம். எங்களுக்கு கிடைத்த குறுகிய நாட்களில், ஒரு சில முக்கிய இடங்களுக்கு மட்டுமே செல்ல முடிந்தது", எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோவில்களின் நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல் மற்றும் பாண்டியர், சோழர், நாயக்கர்களின் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனைகள் மிகவும் மெய் சிலிர்க்க வைத்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மட்டுமல்லாமல், மந்த்ர கூடம், கும்பகோணம் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள முருகன் மெஸ், என அனைத்து இடங்களிலும், உணவு அருமையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Wanted to do a road trip in central Tamilnadu for a long time. Thanks to my daughter who wanted to visit temples, we embarked upon it. Had been to Srirangam, Darasuram, Brihadeeswarar koil, Rameshwaram, Kanadukathan, Thoothukudi and Madurai in the last week of June . Could only… pic.twitter.com/rW52uVJGk2
— rajamouli ss (@ssrajamouli) July 11, 2023
மேலும், அந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டிலிருந்து மூன்று கிலோ வரை எடை அதிகரித்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். மூன்று மாத வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பின், தாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, மிகவும் புத்துணர்ச்சியாக இருந்ததாக, பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பிரபல ரவுடி கல்லறை அப்பு வெட்டிக்கொலை; காவல் நிலையத்திற்கு பின் புறம் அரங்கேறிய கொடூரம்.!