தென்னிந்தியாவில் முதல் வந்தே பாரத்..!!
தென் மாநிலங்களுக்கு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் மோடி, நாட்டின் 5-வது “வந்தே பாரத்” ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உற்சாக வரவேற்பு:
பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்திற்கு வருகை தந்த அவரை, அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மரியாதை செலுத்திய மோடி:
முதற்கட்டமாக, விதான்சௌடா எம்.எல்.ஏ மாளிகைக்கு சென்ற அவர், கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள கனகதாசர் மற்றும் வால்மீகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி:
பின்னர், கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில், நாட்டின் 5-வது மற்றும் தென் மாநிலத்தின் முதலாவது “வந்தே பாரத்” ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதே போல், ”பாரத் கௌரவ் காசி தர்ஷன்” ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கெம்பே கவுடா சிலை திறப்பு:
இதனைத் தொடர்ந்து, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது முனையத்தையும், 108 அடி உயர கெம்பே கவுடாவின் வெண்கல சிலையையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.