முன்னாள் மத்திய அமைச்சர் மனைவி கிட்டி குமாராமங்கலம் கொலை

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மனைவி கிட்டி குமாராமங்கலம் கொலை
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து பின்னர் பாஜகவிற்கு தாவியவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்த வருமான ரங்கராஜன் குமாரமங்கலம், சேலத்தை சேர்ந்தவர். இவரது மறைவினை தொடர்ந்து அவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் உள்ள வசந்த் விகாரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 
அவருடைய வீட்டில் பணியாற்றும் மஞ்சு என்னும் பெண் உதவியுடன் மூன்று பேர் கொலை செய்துள்ளனர். கிட்டியின் வீட்டிற்கு அருகே பணியாற்றும் ராஜூ லக்கனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
முதற்கட்ட விசாரணையில், ராஜூவிற்கு மஞ்சு இரவு 9 மணிக்கு தகவல் அளித்துள்ளார். மஞ்சு, ராஜூ மற்றும் அவரின் உதவியாளர்கள் இருவருக்காக கதவை திறந்துள்ளார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் மஞ்சுவை தாக்கி தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். சத்தம் போட்டு உதவி கேட்க நினைத்த நேரத்தில் ராஜூவும் அவருடைய உதவியாளர்களும் கிட்டியை கொலை செய்துள்ளனர்' என்று கூறினார்.

 
வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துவிட்டு அவர்கள் தப்பித்த நிலையில், தன்னுடைய கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து வெளியே சென்று அக்கபக்கத்தினரின் உதவியை நாடியுள்ளார் மஞ்சு என்று தெரியவந்துள்ளது.  தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மஞ்சுவை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலத்திடம் அலைபேசியில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் ராஜூவை கைது செய்துள்ள நிலையில் மீதம் உள்ள இரண்டு நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து விசாரணை நடத்திய தென்மேற்கு டெல்லி போலீசார்  ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
 
சேலம் தொகுதி எம்.பியான 1991ம் ஆண்டு ரங்கராஜன் குமாரமங்கலம் நீதித்துறை இணை அமைச்சராக செயல்பட்டார். 93ம் ஆண்டு தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் பிறகு அவர் பாஜகவில் இணைந்து வாஜ்பாயின் அமைச்சரவையில் எரிசக்தி துறை அமைச்சராக பதவி வகித்தார். திருச்சிராப்பள்ளி எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட அவர் வாஜ்பாயின் இரண்டு ஆட்சியிலும் அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.