தடுப்பூசி விவகாரத்தில் மோதிக்கொள்ளும் இந்தியா-இங்கிலாந்து...

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் இந்தியாவில் இருந்து வருவோருக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ள நிலையில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியாவில் பத்து நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என வலியுறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி விவகாரத்தில் மோதிக்கொள்ளும் இந்தியா-இங்கிலாந்து...

இந்தியர்கள் 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு அந்த சான்றிதழுடன் பிரிட்டனுக்கு பயணம் செய்தாலும் அவர்கள் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அண்மையில் பிரிட்டன் அரசு உத்தரவிட்டது.

 பிரிட்டனின் இந்த அறிவிப்புக்கு இந்தியாவில் கண்டனங்கள் எழுந்துள்ளது. பிரிட்டனில் உருவாக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரஸெனிகா தடுப்பூசியே இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், அதனை அந்நாடு அங்கீகரிக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 பிரிட்டன் அரசின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தனது பிரிட்டன் பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்தச் சூழலில் ஐநா மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் ட்ருஸ் உள்ளிட்டோரை சந்தித்தார்.

 இந்த சந்திப்பின்போது, தடுப்பூசி சான்றிதழ் விவகாரம் முக்கிய இடம் பிடித்ததாகவும், 2 தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டு அந்த சான்றுடன் பிரிட்டன் வருவோருக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 இந்திய சான்றிதழ்களை அங்கீகரிக்க பிரிட்டிஷ் அரசு தொடர்ந்து மறுத்தால், பதிலடியாக பிரிட்டன் பயணிகளுக்கு 10 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று வலியுறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், பிரிட்டன் மட்டுமின்றி பிற நாடுகளுடன் கொரோனா சான்றிதழ் அங்கீகார கொள்கை தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.