‘பாண்டி மெரினா’ கடற்கரை; நீலக்கொடி அங்கீகாரம் கிடைப்பதற்காக விரிவாக்கபணி தீவிரம்!
புதுச்சேரியில், புதிதாக உருவாக்கபட்டுள்ள ‘பாண்டி மெரினா’ கடற்கரைக்கு நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்திடும் வகையில், கடற்கரையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
உலக சுற்றுலா நகரங்களில் ஒன்றான புதுச்சேரியில், கடற்கரைகளே பிரதானமாக உள்ளன. இங்கு வரும் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடற்கரைகளில் நேரம் செலவிடுவதை பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாக புதுவை நகரை ஒட்டியுள்ள பாரடைஸ், ரூபி, ஈடன், ஈரோ உள்ளிட்ட கடற்கரைகளில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.
இதனிடையே மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டதன் காரணமாக ஈடன் கடற்கரைக்கு சமீபத்தில் சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் நகரையொட்டி புதிதாக உருவாகியுள்ள பாண்டி மெரினா கடற்கரையை விரிவாக்கம் செய்து சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத கடற்கரையாக உருவாக்கி நீலக்கொடி அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மீன் பிடித்துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படுகின்ற மணலை கடற்கரையோரம் நிரப்பி புதிய கடற்கரை பகுதியை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் முடிவடைந்தால், அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்றும், இதன் மூலம் அரசுக்கு அதிகளவு வரி வருவாய் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.