அமலாக்கத்துறை முன் ஆஜரான ராகுல்காந்தி... 3 மணி நேரம் கேள்விகளுக்கு பதிலளித்ததாக தகவல்...!
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஆஜரான ராகுல்காந்தியிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நிறுவனத்தின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை, சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில், டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜரானார்.
அவரிடம் பண பரிமாற்றம் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து ராகுல்காந்தி புறப்பட்டு சென்றார். நிதி முறைகேடு தொடர்பாக ராகுலிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக போலீசாரின் தடையை மீறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சேர்ந்து அமலாக்கத்துறை நோக்கி பேரணியாக சென்றனர்.