பசு காவலர்களை கைது செய்ய வலுக்கும் போராட்டம்... காரணம் என்ன?!!
கர்நாடகாவில் இஸ்லாமிய பசு வியாபாரியை பசு பாதுகாவலர்கள் படை என்ற அமைப்பு கொலை செய்தது தொடர்பாக வாகன ஊர்வல போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ராம்நகர் மாவட்டம் சாந்தூர் கிராமத்தில் இட்ரிஸ் பாஷா என்பவரை வழிமறித்த புனீத் தலைமையிலான பசு பாதுகாவலர்கள் படை என்ற அமைப்பை சேர்ந்த சிலர் பசுக்களை கொண்டு செல்வது தொடர்பாக சண்டையிட்டுள்ளனர். இட்ரிஸ் பாஷா அந்த பசுக்களை சந்தையில் வங்கியுள்ளதாக அதற்கான ஆவணங்களை காண்பித்துள்ளார். ஆவணங்கள் இருந்தும் அவரை விடுவிக்க 2 லட்சம் கேட்டு தராத ஆத்திரத்தில் அவரை தாக்கியுள்ளனர். அங்கு வந்த காவல் துறையினர் அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். புனீத்திடமிருந்து பசு வதை தடை சட்டத்தின் படி புகார் பெற்ற காவல் துறையினர் இட்ரிஸ் பாஷாவை கைது செய்ய சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது சாலை ஓரத்தில் இட்ரிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் பசு பாதுகாவலர்கள் படை எனும் அமைப்பின் தலைவர் புனீத்தை போலீசார் தேடிவருகின்றனர்.
இச்சம்பவத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் லாரி மற்றும் இருசக்கரங்களில் ஊர்வலம் சென்றவாறு கருநாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.