கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்த சோகம்.. குப்பை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்!
தெலங்கானா மாநிலம் நலகொண்டா அருகே கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் குப்பை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
ஹைதராபாத் அடுத்த குடிமல்காப்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பொந்தள ரோஜா, தனது குடும்பத்தினருடன், நலகொண்டா மாவட்டம் யாதகிரி லட்சுமி நரசிம்மா சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார்.
தரிசனத்திற்கும் முன்பு, கோவில் தெப்ப குளத்தில் குடும்பத்தினருடன் குளிக்க இறங்கிய போது, எதிர்பாராத விதமாக இளம்பெண் பொந்தள ரோஜா நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இளம்பெண் உடலை கண்டு குடும்பத்தினர், கதறி அழுத காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கோவிலுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
2 மணி நேரத்திற்கு மேலாக கோவில் வளாகத்திலேயே ரோஜா உடலுடன் குடும்பத்தினர் காத்திருந்த நிலையில், தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், உடலை நகராட்சி குப்பை வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். உயிரிழந்த பக்தரின் உடலை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யாத கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.