பாகிஸ்தானில் பயிற்சி பெற்றோம்... கைதான தீவிரவாதிகள் ஒப்புதல்...

நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்த தங்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டதை கைதான தீவிரவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தானில் பயிற்சி பெற்றோம்... கைதான தீவிரவாதிகள் ஒப்புதல்...

டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய டெல்லி போலீசார் மும்பை, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஜீஷான் மற்றும் ஒசாமா ஆகிய இருவர் தங்களுக்கு இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் தாட்டா பகுதியில் தீவிரவாதிகளால் பயிற்சி அளிக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

1993 மும்பை குண்டுவெடிப்பைப் போலவே ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருந்ததாகவும் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளனர். இருவருக்கும் பாகிஸ்தானில் தீவிரவாத குழுக்களால் பயிற்சி அளிக்கப்பட்ட போது குஜராத்தின் கோத்ரா கலவரம் மற்றும் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் கலவரத்தின் வீடியோக்கள் காண்பிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இருவரும் பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட போதிலும் அவர்களின் பாஸ்போர்ட் பக்கத்தில் பயணத்திற்கான முத்திரையிடப்பட வில்லை என்றும் குவாடர் துறைமுகம் வழியாக அவர்கள் கடல் வழியாக அழைத்துச் செல்லப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.