ஆட்சி கவிழ்ப்புக்கு ரூ.6300 கோடி செலவு செய்ததா பாஜக? கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ.6,300 கோடி செலவு செய்யவில்லை என்றால், மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டியதில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
டெல்லி சட்ட மன்றத்தில் இன்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் கிடைத்த பணத்தை, சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துகிறது. மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வாங்குவதற்கும், மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் பாஜக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளதால், விலைவாசி உயர்வின் பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
பாஜக அல்லாத அரசுகளை கவிழ்ப்பதற்காக இதுவரை ரூ.6,300 கோடி செலவிட்டுள்ளனர். அரசுகளை கவிழ்க்காமல் இருந்திருந்தால் கோதுமை, அரிசி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டியதில்லை. மக்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
மேலும் படிக்க : பாஜகவில் இணையும் ஒவ்வொரு எம்.எல்.ஏ வுக்கும் ரூ.20 கோடி…ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!