சிறுவன் தண்ணீரில் மிதந்து உலக சாதனை!

சிறுவன் தண்ணீரில் மிதந்து உலக சாதனை!

தூத்துக்குடி: தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.

தற்போதுள்ள சிறுவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்களாகவும், எதையும் சாதிக்கும் திறமையுள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். இந்த வகையில், ஒன்பது வயது சிறுவன் ஒருவர் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார். 

தூத்துக்குடி, பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்பிரபு மற்றும் தேவி தம்பதி. இவர்களின் மகன் ஹர்சன்(9). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பில் பயின்று வரும் இச்சிறுவன் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார். நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தண்ணீரில் மிதந்து உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார். 

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில், உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில், சிறுவன் ஹர்ஷன் காலை 10 மணி முதல், தொடர்ந்து மிதந்தவாறு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சியில், தொடர்ந்து 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தண்ணீரில் மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவனத்தின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

தூத்துக்குடி டிஎஸ்பி சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் இணைந்து, ஹர்சனை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.