சிறையில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முத்துமனோ என்பவர், கடந்த மாதம் 22ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இச்சம்பவம் காரணமாக பாளையங்கோட்டை சிறைச்சாலைப் பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,அவரது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும் , விசாரணை முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார்.