உச்சிப் பிள்ளையாருக்கு 150கிலோ கொழுக்கட்டை படையல்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

விநாயகரை வழிபட்டு எந்த ஒருகாரியத்தை தொடங்கினால் அந்த காரியம் நல்லபடியாக அமையும் என்பது இந்துமக்களின் நம்பிக்கையாகும். இதனால் விநாயகரை முழுமுதற்கடவுளாக இந்துமக்கள் அதிக அளவில் வழிபட்டுவருகின்றனர். 

திருச்சியில் பிரசித்திபெற்ற மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையர் கோவிலில் விநாயகர்சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு 50கிலோ பச்சரிசி, 50கிலோ உருண்டை வெல்லம், 2கிலோ எள், 1கிலோ ஏலக்காய் மற்றும் சாதிக்காய், 6கிலோ நெய், 100தேங்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு தலா 75கிலோ எடையில் 150கிலோ எடையுள்ள இரண்டு கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு, சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து  கொண்டுவரப்பட்டு பின்னர் மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப் பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் கொழுக்கட்டையானது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து விநாயகரை வழிபட்டுச் சென்றனர். 

மாவட்டத்தின் பிற விநாயகர் ஆலயங்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றுவருகிறது. திருச்சி மாவட்டத்தில் 1200க்கும் அதிகமான பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: "அடிமைகளுடன் சேர்த்து எஜமானர்களையும் விரட்டியடிப்போம்" அமைச்சர் உதயநிதி பேச்சு!!