தமிழகத்தில் நாளை அமலுக்கு வருகிறது புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...
தமிழகத்தில் 12 நாட்கள் நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் தொடங்க உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 31-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாளை முதல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மதுக்கூடங்கள், திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கபபட்டுள்ளது.
அதே நேரத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாக பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. மீறினால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.