தன் மகனை மீட்டு தரக்கோரி ஏழு மாத கர்ப்பிணி கண்ணீர் மல்க கோரிக்கை...!

சங்கராபுரத்தில் நான்கு வயதான தன் மகனை மீட்டு தரக்கோரி ஏழு மாத கர்ப்பிணி கண்ணீர் மல்க கோரிக்கை...!

தன் மகனை மீட்டு தரக்கோரி ஏழு மாத கர்ப்பிணி கண்ணீர் மல்க கோரிக்கை...!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டபம் 
கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன் கோகுல்ராஜ். இவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளவரசி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில், இவர்களுக்கு ருத்ரேஷ் (4) மகன் உள்ளார். மேலும் கோகுல்ராஜும் , இளவரசியும்  குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

பின்னர், கோகுல்ராஜ் தனது தாய் தந்தையிடம் மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஒப்படைத்தார். அதேபோல் அந்த குழந்தையை கோகுலராஜின் பெற்றோர் வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ருத்ரேஷ் மீது அதிக பாசம் வைத்த கோகுலராஜின் பெற்றோர் சொத்துக்களை பேரன் ருத்ரேஷ் மீது எழுதி வைத்தனர். 

கோகுல்ராஜூம் இளவரசியும் நான்காண்டுகளாக பிரிந்து வாழ்ந்த நிலையில் தற்போது ஒன்று சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இளவரசி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கோகுல்ராஜூம் அவரது மனைவி இளவரசியும் இணைந்து மகனை கொடுக்கும்படி பார்த்தசாரதியிடம் கேட்டுள்ளனர். 

அதற்கு, "உன் மகனை தர முடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்.. உன் மகன் மீது நாங்கள் எல்லா சொத்துக்களையும் எழுதி வைத்துள்ளோம்.  அதனால் உன் மகனை தர முடியாது. அப்படி உன் மகனை அடிக்கடி எங்களிடம் கேட்டால் உன் மகனை கொன்று விடுவோம்" என கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த இளவரசியும் கோகுல்ராஜூம் தன்னுடைய மகனைப் பெற்றுத் தரும்படி சங்கராபுரம் காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் இந்த புகார் குறித்து காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ஆத்திரம் அடைந்த இளவரசியின் உறவினர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்களும் இணைந்து சங்கராபுரம் காவல்துறையின் அலட்சியப் போக்கை கண்டித்து, சங்கராபுரம் முதல் பாலமேட்டில்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரதிய ஜனதா கட்சியினரும் காவல்துறையினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.