சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை 5 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் 71 பேர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக மாநாடு, உறுப்பினர்கள் சேர்க்கை, டிடிவி - ஓபிஎஸ் இணைந்து செயல்படுவதாக அறிவித்தது உள்ளிட்ட அரசியல் சூழல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள அமைச்சர் ஜெயகுமார்,விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக ஆளுநருக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமை என கூறினார். மேலும் உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டுமெனவும் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.