பேனா நினைவு சின்னம்: "அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பது அரசியலுக்காவே" மீன் வளத்துறை அமைச்சர்!
மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பது அரசியலுக்காவே என மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா 15 தொண்டு நிறுவனங்களுக்கு 1.14 கோடி ரூபாயை தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டமான வள்ளலார் பல்லுயிர் காப்பகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2021 ஆண்டில் தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டிய அவர் இத்திட்டத்தின் மூலம் இன்று ஆதரவற்ற பிராணிகளுக்கு 3 மாதத்திற்கு உணவு வழங்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்நிதியானது தெருவில் சுற்றித்திரியும் பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் 15 தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதலிளித்த அவர்,மெரினாவில் கடலுக்குள் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பது அரசியலுக்காவே செய்வதாக தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தினால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கூறிய அவர், மீனவர்களின் நலனுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கைகளையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செய்ய மாட்டார் எனவும் தெரிவித்தார். மேலும் மீன் பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகையாக 5 ஆயிரம் ரூபாய் ஒரு வாரத்தில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதையும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!