"நல்ல பால் வழங்குவோருக்கு ரூ.1 ஊக்கத் தொகை" அமைச்சர் மனோ தங்கராஜ்!!
தனது வீடு திறந்தே தான் இருக்கும், பால் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதனை கடிதம் மூலமாகவோ, நேரில் வந்தோ என்னை தொடர்பு கொண்டால், தீர்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ளார் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
மதுரை ஆவின் தொழிற்சாலையில் எட்டு மாவட்டங்களை சார்ந்த ஆவின் அலுவலர்களுக்கான பயிற்சியை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்பொழுது பேசிய அவர், "ஆவினில் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மேம்பாடு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக எடுத்துள்ள முயற்சி நல்ல பலனை அடைந்துள்ளது. பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்பது சித்தரிக்கப்பட்ட தகவல். தனியார் உற்பத்தியாளர்கள் போட்டியை முறியடிக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "தற்போது தீவிரமாக கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வசதிகள், பராமரிப்பதற்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பணிகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாதம் பல்லாயிரக்கணக்கான கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்க உள்ளோம்" எனறும் அறிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "உலக அளவில் பார்த்தோமானால் கால்நடை வளர்ச்சி மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை திண்டுக்கல்லில் துவங்க உள்ளோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், "எனது வீடு திறந்தே தான் இருக்கும், பால் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதனை கடிதம் மூலமாகவோ, நேரில் வந்தோ என்னை தொடர்பு கொண்டால், தீர்வு காணப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.