உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக மேடையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை..! வலுக்கும் எதிர்ப்பு...!!

திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உயிரோடு இருக்கும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக மேடையில் பேசிய  பாஜக தலைவர் அண்ணாமலை..! வலுக்கும் எதிர்ப்பு...!!

நாமக்கல் பூங்கா சாலையில் பாஜக 8ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசினார். அப்போது திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக கூறினார்.  உயிரோடு இருக்கும் ஆற்காடு வீராசாமி, இறந்து விட்டதாக அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,  திமுக தலைவர்கள் குறித்து எப்போதும் உளறும் பாஜக தலைவர் அண்ணாமலை, தனது தந்தை வீராசாமி குறித்து கூறிய தவறான கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்திருந்தார். மேலும், நாகரீகமற்ற முறையில் உளறுவதை இனியாவது அவர் நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். 

இதனிடையே, உங்களுடைய தந்தை நீண்ட ஆயுளுடன் உங்கள் அனைவரது, அரவணைப்புடன் வாழ இறைவனை வேண்டுவதாகவும், நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக அவர் இறந்துவிட்டதாக சொன்ன கருத்துக்காக வருந்துகிறேன் எனவும் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரி பதில் அளித்துள்ளார்.