வீட்டுமனையை அளக்க லஞ்சம்... நில அளவையர் கணவருடன் கைது...

வீட்டுமனையை அளந்து பட்டா மாற்றம் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர், கணவருடன் கைது செய்யப்பட்டார்.

வீட்டுமனையை அளக்க லஞ்சம்... நில அளவையர் கணவருடன் கைது...

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா அரும்புலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் தனது பெயரிலும், தனது மனைவி கலைச்செல்வியின் பெயரிலும் சேர்த்து 4½ செண்ட் அளவில் வீட்டுமனை வாங்கினார்.

இந்த வீட்டுமனையை அளந்து அதை உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்து தரக்கோரி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியாற்றி வரும் நில அளவையரான விழுப்புரம் வழுதரெட்டி பாலாஜி நகரை சேர்ந்த ஸ்ரீதேவி (48) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அணுகினார்.

அப்போது வீட்டுமனையை அளக்க வேண்டுமென்றால் ரூ.7 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கருணாகரனிடம் ஸ்ரீதேவி கூறியதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கருணாகரன், தான் ஏழ்மையான குடும்பம், தன்னிடம் பணம் இல்லை, எப்படியாவது என்னுடைய வீட்டுமனையை அளந்து பட்டா மாற்றம் செய்து தரும்படி கூறினார். அதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே வீட்டுமனையை அளந்து தர முடியும் என கறாராக கூறிய ஸ்ரீதேவி, அந்த பணத்தை விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு நேரில் வந்து தரும்படி கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கருணாகரன், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை கருணாகரனிடம் கொடுத்து அதை ஸ்ரீதேவியிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று கருணாகரன் எடுத்துக்கொண்டு விழுப்புரம் பாலாஜி நகரில் உள்ள நில அளவையர் ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரிடம் கருணாகரன், லஞ்சப்பணத்தை கொடுத்தார்.

அந்த பணத்தை ஸ்ரீதேவி வாங்கி அதனை தனது கணவர் வெற்றிவேலிடம் (53) கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் ஆகியோர் விரைந்து சென்று ஸ்ரீதேவியையும், அவரது கணவர் வெற்றிவேலையும் மடக்கிப்பிடித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்கள் இருவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.