" ஆவின் பால் எந்த வித தட்டுப்பாடுமின்றி கிடைக்கும்" - அமைச்சர் மனோ தங்கராஜ்.
எந்தவித தட்டுப்பாடும் இன்றி ஆவின் பால் கிடைக்கும் என்பதால், மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆவின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆவின் நிறுவனம் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எனவும், இதில் மிகப்பெரிய சவால்கள் இருக்கின்றது என்றும் கடந்த இரண்டு வார காலமாக இதில் உள்ள சவால்களை கண்டறிந்து சரி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போது, இரண்டு முக்கியமான நோக்கங்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று குறிப்பிட்டார். அதாவது, ஒன்று; விவசாய பெருமக்களிடமிருந்து போதிய விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், இரண்டாவதாக; பொதுமக்களுக்கு அந்த பாலை குறைந்த விலையில் தரமானதாக வழங்க வேண்டும் என்றும் கூறினார். அதோடு, கடந்த இரண்டு வாரங்களில் பால் கொள்முதல் அதிகரித்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்கள் பற்றாக்குறை குறித்து தீவிரமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
அதைத் தொடர்ந்து, " வருகின்ற காலகட்டங்களில் நிச்சயமாக ஆவின் நிறுவனம் மேலும் மேலும் சிறப்பாக செயல்பட்டு அனைத்தும் முயற்சிகளையும் தீர்க்கமாக நடைமுறைப்படுத்துவோம் ", என்றும், இதுகுறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; எனவும், பால் எந்தவித தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் எனவும் உறுதியளித்தார்.
அதோடு, சிறிய அளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கக்கூடிய இடத்தில் பிரச்சினைகள் இருக்கின்றது என்றும், பால் கொண்டு செல்வதில் கால தாமதம் ஏற்படுவதாகவும், அதற்கும் உரிய நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதையும் படிக்க | ”மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்” - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!
தொடர்ந்து பேசிய அவர், " ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் இன்னொரு மாநிலம் தலையிடக்கூடாது என்பது விதி. எங்களுடைய பால் உற்பத்தி ஏரியாவில் குஜராத்தின் பால் நிறுவனம் தலையிடக்கூடாது என்பது குறித்து முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். இதில் எந்தவித பயமும் கிடையாது. நமது நலனில் சிறிதளவும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்கின்ற கவனத்தின் அடிப்படையில் தான் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி தங்களது கருத்தை தெரிவித்தார்," எனவும் குறிப்பிட்டார்.
அதோடு, ஆவின் நிறுவனத்தின் மூலம் விவசாயிகள் கால்நடை வாங்குவதற்கு கடன் உதவி வழங்கச் செய்வதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், தரமான பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதும்; பால் உற்பத்தியை பெருக்கி பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளை இலக்காக வைத்து தீவிரமாக செயல்பட உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ”இனி கல்லூரிகளிலும் ஒரே பாடத்திட்டம், ஒரே நாளில் முடிவு” - பொன்முடி அறிவிப்பு!