கார் விபத்தை விசாரிக்க சென்றபோது விபத்து.. உயிரிழந்த இரு காவலர்களுக்கு முதல்வர் இரங்கல்.. தலா 25 லட்சம் நிவாரணம்!!
சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்கள் இருவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில் நேற்றிரவு கார் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்க சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தன், காவலர் நந்தகோபால் மற்றும் இரவு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், பழனி மற்றும் காவலர்கள் தேவராஜன், மணிகண்டன் ஆகியோர் நள்ளிரவு சென்றுள்ளனர்.
அவர்கள் விபத்தில் தொடர்புடையவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த வழியாக அதிவேகமாக வந்த வேன் காவலர்கள் மீது மோதியது. இதில் சந்திரசேகர் மற்றும் தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் இறுதி சடங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம். எல்.ஏ ஆர். என் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிதியிலிருந்து வழங்கவும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.