அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி கூறி இருப்பது, விவசாயிகளின் அறவழி போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே எனவும், மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள் தான் மதிக்கப்பட வேண்டும் எனவும் அதுவே வரலாறு சொல்லும் பாடம் எனவும் பதிவிட்டுள்ளார். அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா, காந்தியின் மண் என்று உலகிற்கு எடுத்து சொல்லியிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் தாம் பெருமைகொள்ளத்தக்கதாகும் எனவும் பதிவிட்டுள்ளார்.