”தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்” - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

”தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக  வேண்டும்” -   உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு  வழக்கில் தலைமைச் செயலாளர்  நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்ர 2021 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் மனுதாரர்,  "நான் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி  பஞ்சாயத்து நிர்வாக இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தேன்.   இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் என்னை பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

 இந்த உத்தரவு ரத்து செய்து  எனக்கு வழங்க வேண்டிய உரிய பணி உயர்வு மற்றும்  பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  2016 வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கினை விசாரித்த  நீதிபதி எனக்கு பணி வழங்கி பணி நீக்கம் செய்யப்பட்ட இடைப்பட்ட காலத்திற்கு 25% ஊதியம் வழங்கவும் 2020 ஆண்டு உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து,  மேல் முறையீடு செய்ய பட்டது. அதிலும் எனக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

ஆனால் நீதிமன்ற உத்தரவு தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்”,  என மனுவில்  குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரருக்கு 2021 ஆம் ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேலை செய்யாத காலத்திற்கான 25 சதவீதம் பண பலன்கள் வழங்கப்படவில்லை.

இந்த வழக்கில் IAS ஆட்சி பணி  மூத்த அதிகாரி எதிர்மனுதாரராக இருந்தும்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போது வரை எந்தவித பதில் மனுவோ விளக்கமோ அளிக்கப்படவில்லை.  இதிலிருந்து நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.  இது ஆச்சரியமாகவும் விசித்திரமாகவும் உள்ளது. 

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரனைக்கு வருவது அறிந்து 17/7/2023 அன்று அரசு தரப்பில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 மேலும் இந்த வழக்கு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது ஆனால் 10/7/2023 -ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகும். 

எனவே, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள அப்போதைய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் தற்போது தமிழக தலைமை செயலாளராக உள்ள சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக  வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிக்க    |  இடைநிலை ஆசிரியர் நியமனம் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை மனு தள்ளுபடி..!