கோவை: டிஐஜி விஜயகுமார் விவகாரம்: முதல் தகவல் அறிக்கையில் இருந்தது என்ன?

கோவை:   டிஐஜி விஜயகுமார் விவகாரம்:  முதல் தகவல் அறிக்கையில் இருந்தது என்ன?

கோவை டிஐஜி விஜயகுமார் தர்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. 

கோவை சரக காவல் துறை டிஐஜி-க்கு தனிப்பாதுகாப்பு காவலராக  பணியாற்றிய   யு.ரவிச்சந்திரன் ( வயது -35 ), ஈரோடு மாவட்ட ஆயுதப்படை முதல் நிலைக் காவலர்,   என்பவரிடமிருந்து பெற்ற எழுத்து மூலமான புகாரின் விபரம் பின்வருமாறு:

” அய்யா, நான் ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறேன். நான் 2011-ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தேன். 2016 ஆம் ஆண்டு முதல் கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்களுக்கு தனிப்பாதுகாப்பு காவலராக ( GUN MAN)பணிபுரிந்து வருகிறேன். 
எனக்கு கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அலுவலுக்காக கோவை மாவட்ட ஆயுதப்படையிலிருந்து BUTT NO:183 என்ற 9 MM PISTOL வழங்கப்பட்டுள்ளது. நேற்று 06.07.2023 ஆம் தேதி நான் பாதுகாப்பு அலுவலாக சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் பணியில் இருந்தேன். 

அய்யா அவர்களுடன் குடும்பத்துடன் வெளியே போய்விட்டு இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டோம். அய்யா அவர்கள் கோவை சரகத்திற்கு ஜனவரி மாதம் வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று மாத்திரை எடுத்துக்கொள்வார். நான் முகாம் அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே தங்கியிருந்தேன். வழக்கம்போல் எப்போதும் அய்யா அவர்கள் காலை 07.00 மணிக்கு DSR பார்ப்பதற்காக கீழே உள்ள DSR ROOMக்கு வருவார். 

இன்று 07.07.2023-ம் தேதி 06.30 மணிக்கெல்லாம் அய்யா கீழே வந்துவிட்டார். முகாம் அலுவலகத்தில் அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் குடிப்பதற்கு பால் கேட்டார். அவர் உடனே பால்காய்ச்சிக்கொடுத்தார். பின்பு காலை 06. 40 மணியளவில் பாலை குடித்துவிட்டு நான் தங்கியிருக்கும் அறைக்கே அய்யா வந்து DSR கேட்டார். நான் DSR எடுத்துக்கொடுத்தேன். அப்போது நான் தங்கியிருந்த அறையில் நான் எப்போதும் போல் PISTOL வைத்திருக்கும் இடத்திற்கு சென்று என்னுடைய PISTOL-லை எடுத்தவர் இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று என்னிடம் பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே சென்றார். நான் T-SHIRT போட்டுட்டு வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் அறையில் இருந்த CAMP OFFICE டிரைவர் அன்பழகனும் வெளியே ஓடி வந்து பார்த்தோம். 

அப்போது அய்யா அவர்கள் மல்லாந்த நிலையில் தலையில் இரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். PISTOL அங்கேயே கிடந்தது. அம்மாவுக்கு தகவல் சொல்வதற்காக அன்பழகனும் நானும் சத்தம் போட்டுக்கொண்டே மேலே ஓடினோம். எங்களது சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்தவர் என்ன? என்று கேட்டார்கள். நாங்கள் விவரத்தை சொல்ல எங்களுடன் அம்மாவும் ஓடி வந்து அய்யா கிடந்ததை பார்த்து உடனடியாக முகாம் அலுவலகத்தில் இருந்த பொலிரோ வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சுமார் 7 மணியளவில் கொண்டு வந்து சேர்த்தோம். 

எங்களுடன் SENTRY காவலர் ஸ்ரீநாத் உடன் இருந்தார். அய்யாவை பரிசோதித்த மருத்துவர்கள்,  DIG அய்யா இறந்துவிட்டதாக தகவல் சொன்னார்கள். மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயர் அதிகாரிக்களுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தேன்.  என்ன காரணத்திற்காக அய்யா சுட்டு கொண்டார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” . 

இப்படிக்கு :
ரவிச்சந்திரன்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதையும் படிக்க   | மன அழுத்தம்: காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை..!