உதார் உட்ட வேலுமணி... வூடு புகுந்து வெளுக்கும் லஞ்சஒழிப்புத்துறை!!

வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவரது வீடு உள்ளிட்ட 53 இடங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில் அவருக்கு எதிரான கண்டன குரல்கள் சமூக சமூகவலைத்தளங்களில் வலுத்து வருகிறது.

உதார் உட்ட வேலுமணி... வூடு புகுந்து வெளுக்கும் லஞ்சஒழிப்புத்துறை!!
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. மேலும் உள்ளாட்சித்துறையின் 811 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில்  கடந்த 2018ம் ஆண்டு புகாரளிக்கப்பட்டது.  ஒரே முகவரியில் இருந்து ஏராளமான டெண்டர்கள் எடுக்கப்பட்டுள்ளது அம்பலமான நிலையில் சி.ஆர்.கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனம் 6 ஆண்டுகளில் 11,363.15% வளர்ச்சியடைந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கை புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, எஸ்பி வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் புகார்கள் தொடர்பாக எஸ்பி வேலுமணியின் உறவினர்கள், நண்பர்கள் என 17 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலிசார், 53 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

குனியமுத்தூரில் உள்ள எஸ்பி வேலுமணி, அவருடைய சகோதர் எஸ்பி அன்பரசனின் வீடு மற்றும் வடவள்ளி அதிமுக பிரமுகர் சந்திர சேகர் வீடு, அவர்கள் நடத்தி வரும் ஆலயம் அறக்கட்டளையின் அலுவலகம் என கோவையில் மட்டும் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வைத்து எஸ்.பி வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களை சேகரித்தனர். அப்போது அங்கு வந்த அதிமுக நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

அதேபோல அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, தன்னை யாராலும் தொட முடியாது என்று எஸ் பி வேலுமணி கூறியதை பகிர்ந்து வரும் இணையவாசிகள்,  #ஊழல்மணி_வேலுமணி கைது செய்து ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்யப்படவேண்டும் என சமூகவலைத்தளங்களில் வேலுமணிக்கு எதிராக கண்டனக்குரல்கள் வலுத்து வருகின்றனர்.