விவசாய மின் இணைப்புகள் சூரிய சக்திக்கு மாற்றம் - அரசாணை வெளியீடு.
விவசாய மின் இணைப்புகளை சோதனை அடிப்படையில் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மாற்றியமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் வகையில் 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை சோதனை அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோதனை அடிப்படையில் 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை சூரிய சக்தி மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளிப்பதாகவும், இதற்கான 30 சதவீத நிதியை மத்திய அரசும், 30 சதவீத நிதியை மாநில அரசும் வழங்கும் என்றும், மீதமுள்ள 40 சதவீத நிதியை டான்ஜெட்கோ உதவியுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கடன் பெற்று விவசாயிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறியளவில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பாசன பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுவதோடு, மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியம் விலைக்கு பெற்றுக் கொள்ளும் என்றும், அதில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.2. 28 என்னும் தொகையை வங்கிக்கு மின்வாரியம் வழங்கும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னை மாநகராட்சியில் 100க்கும் மேற்பட்டோர் ரூ.4000 கோடி வரிபாக்கி!