ஜெட் வேகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு : வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடல்?
தமிழகத்தில் ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்பட கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பு, இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரசுடன் இணைந்து உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்றும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை வகுப்பது, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்தும், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்துவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க உள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பான முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.