ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு...! இன்று தொடங்கியது..!

ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு...! இன்று தொடங்கியது..!

ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளது. 

இந்த 5 அரசுக் கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் பட்டப் படிப்புகளில் 2022-23 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 2,573 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 878 விண்ணப்பங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 707 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுக் கல்லூரிகளில் 21 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 68 இடங்கள் என மொத்தம் 89 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 424 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்குகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரை முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. இதைத் தொடர்ந்து, காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7. 5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு பிற்பகலில் தொடங்கி ஜனவரி 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதையும் படிக்க : தடுப்பூசி செலுத்த வந்த நாய்க்கு வெறிபிடித்த சம்பவம்...! அச்சத்தில் அரறியடித்த மக்கள்...!