கடலூர்: மின்னணு இயந்திரம் பழுதானதால் இன்று 4வது வார்டில் மறு வாக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டுக்கு இன்று மறு வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது.

கடலூர்: மின்னணு இயந்திரம் பழுதானதால் இன்று 4வது வார்டில் மறு வாக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. அப்போது வார்டு வாரியாக மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தை எடுத்து சென்று அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது 4வது வார்டுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் போது திரையிடும் பகுதியில் பழுது ஏற்பட்டதாகவும், இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய பெல் நிறுவன பொறியாளர்கள் முயன்றும் இயலவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 4வது வார்டில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும் என்றும், இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடத்தி தேர்தல் முடிவுகள் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.