உடல்நலகுறைவுடன் சுற்றிதிரிந்த குட்டி யானை உயிரிழப்பு....

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உடல் நலக்குறைவுடன் சுற்றி திரிந்த குட்டி ஆண் யானை உயிரிழந்தது.

உடல்நலகுறைவுடன் சுற்றிதிரிந்த குட்டி யானை உயிரிழப்பு....

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரிக்கு அருகில் உள்ள சிறிய பள்ளத்திற்குள் கடந்த 6-ம் தேதி  சுமார் 7 வயதான குட்டி ஆண் யானை ஒன்று வழுக்கி விழுந்தது.

தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உடனடியாக அங்கு சென்று பொக்லைன் உதவியுடன் பள்ளத்தை சீர்படுத்தி குட்டியானையை மீட்டனர்.

அதனை தொடர்ந்து யானைக்கு முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குட்டி யானை இயந்திர உதவியால் தானாக எழுந்து புதர்ப்பகுதிக்குள் சென்றது. இதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த யானை நேற்று முன் தினம் காலை பூச்சியூரில் உள்ள கிரீன் கார்டன் வனப்பகுதிக்கு வெளியே சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா நிலத்திற்குள் வந்து அங்கேயே படுத்துக்கொண்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குட்டி யானைக்கு  முதுமலை வனக் கால்நடை மருத்துவர்கள் மீண்டும் சிகிச்சை அளித்தனர்.  நேற்று முன்தினம் காலையில் இருந்தே நேற்று அதிகாலை வரை இரவு முழுவதும்  தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. கிட்டதட்ட 50 குளுக்கோஸ் பாட்டில்கள் குட்டி யானைக்கு செலுத்தப்பட்டது.

மேலும் வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகளும் யானைக்கு உணவாக கொடுக்கப்பட்டன.  இருப்பினும் குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் குட்டியானையை உடற்கூறாய்வு செய்தனர். அதில் அந்த யானைக்கு நீர்சத்துக்குறைபாடு, கல்லீரல் பிரச்சனை காரணமாக இறந்துள்ளது தெரியவந்தது.