காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாற வாய்ப்பு.. அதுவும் வரும் 23ஆம் தேதி!! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற்று, வரும் 23ம் தேதி வங்க தேசம் மற்றும் மியான்மரை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாற வாய்ப்பு.. அதுவும் வரும் 23ஆம் தேதி!! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில் இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவுகிறது என்றும்,  இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடக்கு, வடமேற்கு திசையில் அந்தமான் கடலோரம் வழியே நகர்ந்து, 20ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  அதன்பின் புயலாக வலுப் பெற்று, 23ம் தேதி, வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியிலும், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் நாளையும், மணிக்கு 60 கி.மீ. , வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.