இன்றுடன் ஓய்வுபெறும் காவல் உயர் அதிகாரிகள்...அணிவகுப்பு மரியாதை ஏற்ற டி.ஜி.பி-க்கள்!

இன்றுடன் ஓய்வுபெறும் காவல் உயர் அதிகாரிகள்...அணிவகுப்பு மரியாதை ஏற்ற டி.ஜி.பி-க்கள்!

காவல் பணியில் இருந்து  ஓய்வுபெறும் சிறைத்துறை டி.ஜி.பி. சுனில் குமார் சிங் மற்றும் சிபிசிஐடி டி.ஜி.பி ஷகீல் அக்தர் ஆகியோருக்கான பிரிவு உபச்சார விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

சுனில் குமார் சிங்:

சிறைத்துறை டி.ஜி.பி-யாக பதவி வகித்து வந்த சுனில் குமார் சிங் தனது 34 ஆண்டு கால காவல்துறை பணியை நிறைவு செய்து இன்று பணி ஓய்வு பெறுகிறார்.  1988 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான சுனில் குமார் சிங் திருச்சி காவல் ஆணையராகவும், சேலம் காவல் ஆணையராகவும், சென்னையில் கூடுதல் ஆணையராகவும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி-யாகவும், பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யாகவும் பதவிகள் வகித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டி.ஜி.பி அந்தஸ்தைப் பெற்ற இவர், தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சிறைத்துறை டி.ஜி.பி-யான சுனில் குமார் சிங் இன்றுடன் தனது பணியை சிறப்பாக நிறைவு செய்து பணி ஓய்வு பெறுகிறார்.

இதையும் படிக்க: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீவிரவாத தாக்குதல் என்று சொன்னேன்...!

முகமது ஷக்கீல் அக்தர்:

அதேபோல சி.பி.சி.ஐ.டி, டி.ஜி.பி-யாக பதவி வகித்து வந்த முகமது ஷக்கீல் அக்தரும் தனது 33 ஆண்டுகால காவல்துறை பணியை நிறைவு செய்து இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ஷக்கீல் அக்தர் தர்மபுரி மாவட்ட ஏ.எஸ்.பி-யாக தனது பணியைத் தொடங்கி தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்டாகவும், பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்.பி, காஞ்சிபுரம் மாவட்ட டி.ஐ.ஜி, நிர்வாகப் பிரிவு ஐ.ஜி, தலைமையக ஐ.ஜி, தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி, தமிழ்நாடு சிறப்பு காவல்ப்படை கூடுதல் டி.ஜி.பி மற்றும் முக்கிய அமைச்சர்களின் தனிச் செயலாளர் போன்ற பல்வேறு பொறுப்புகளிலும் இவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 3 முறை ஜனாதிபதியின் விருதையும் இவர் பெற்றுள்ளார். இறுதியாக தனது காவல் பணியில் சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி-யாக பதவி வகித்து வந்த ஷக்கீல் அக்தர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

பிரிவு உபச்சார விழா:

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி தங்கள் பணிகளை நிறைவு செய்து இன்றுடன் பணி ஓய்வு பெறும் சுனில் குமார் சிங் மற்றும் ஷக்கீல் அக்தர் ஆகிய இரு டி.ஜி.பி-க்களுக்கும் தமிழக காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையுடன் பிரிவு உபச்சார விழா நிகழ்ச்சி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, அதிவிரைவுப் படை, கமாண்டோ படை, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை உள்ளிட்ட படையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில் சென்று டி.ஜி.பி-க்கள் ஏற்றுக்கொண்டனர்.