கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ...

அம்மாபள்ளி அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ...

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணாபுரம் அம்மாபள்ளி அணை நிரம்பியதை தொடர்ந்து, அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் 6வது முறையாக ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மழை தொடரும் பட்சத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவு அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதால், கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.