விவசாயி தாக்கப்பட்ட வழக்கு- வி.ஏ.ஓ மற்றும் கிராம உதவியாளர் கைது

கோவையில் விவசாயி தாக்கப்பட்ட வழக்கில் வி.ஏ.ஓ. மற்றும் கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயி தாக்கப்பட்ட வழக்கு- வி.ஏ.ஓ மற்றும்  கிராம உதவியாளர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில், பட்டாவில் பெயர் நீக்கம் குறித்து கேட்கச் சென்ற விவசாயி கோபால் சாமிக்கும், அங்கிருந்த வி.ஏ.ஓ., கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மனுதாரர் காலில் விழுந்து கிராம உதவியாளர் முத்துசாமி கதறி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. இதனையடுத்து கோபால்சாமி மீது வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முழுமையான வீடியோ வெளியான பிறகு, விவசாயி கோபால்சாமி மீது கிராம உதவியாளர் முத்துசாமி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, விவசாயி தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விவசாய அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். அதன் பலனாக, விவசாயி கோபால்சாமியை தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியதாக கிராம உதவியாளர் முத்துசாமியும், உடந்தையாக இருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியும் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.