பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி...! ஏற்றுக்கொண்டு வாக்குறுதி அளித்த சட்டமன்ற உறுப்பினர்...!

ஆண்டிபட்டியில் கண்மாய்களில் நீர் நிரப்பக் கோரி 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணி...!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி...! ஏற்றுக்கொண்டு வாக்குறுதி அளித்த சட்டமன்ற உறுப்பினர்...!

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 90 சதவீதம் பேர் விவசாயிகளாகவும், விவசாயக் கூலிகளாகவும், கால்நடை வளர்ப்பவர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் உள்ள கண்மாய், குளம், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயிகள் துன்பப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. 

எனவே முல்லை பெரியாறிலிருந்து குழாய்கள் மூலம் இப்பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்து அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக, இப்பகுதி விவசாய சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு அரசும் இதற்கு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மகாராஜன் இது குறித்து சட்டசபையில் கோரிக்கையும் வைத்தார்.  இந்நிலையில் ஆண்டிபட்டி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் முன்பு , கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி தொடங்கியது. ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து சட்டமன்ற அலுவலக கட்டிடத்திற்கு வந்தடைந்து. மேலும் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனிடம் விவசாய சங்கங்களின் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், தொடர்ந்து இத்திட்டம் நிறைவேற்றுவதற்காக குரல் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.