திமுக தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் ஸ்டாலின்...!

திமுக தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் ஸ்டாலின்...!

திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட வரும் 7-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட வரும் 7-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தி.மு.க.வின் 15-வது அமைப்புத் தேர்தல் அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று, தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு வரும் 9-ம் தேதி செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெற உள்ளதாகவும் தலைவர் பதவிக்காக வரும் 7-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்...ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!

மாநிலக் கட்சியாக இருந்தாலும், உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், இந்தியாவில் உள்ள கட்சிகள் பலவற்றுக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருப்பது திமுக என்றும்  ஆனால், சில பிற்போக்கு சக்திகள், கழகத் தேர்தல் முடிவுகள் குறித்து, மட்டரகமாகப் பேசி வருவதாகவும் நாடறிந்த சில ஏடுகளும், அறிந்தோ அறியாமலோ, அதற்கு உதவுவது, அத்தகைய ஏடுகளின் நம்பகத்தன்மைக்குச் சிறிதும் பொருத்தமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை விளைவதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத பொல்லாங்கு எண்ணம் கொண்டோர், நமக்கு எதிராகச் சிறு துரும்பையும் பெரும் தூணாக்க முடியுமா எனத் துடித்துக் கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர பாடுபடும் திமுக அரசுக்கு ஊறு விளைவித்திட வேண்டும் என நினைப்போரை சரியாக அடையாளம் கண்டு எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயலாற்றிட வேண்டும் என்றும்  தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.