குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க தமிழக அரசு முடிவு?

தமிழக அரசும்பெரும்பாலான குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க தமிழக அரசு முடிவு?

தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக குரூப்-1, குரூப்-2 குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப்-4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. ஆனால், குரூப்-1, குரூப்-2 நிலையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன், நேர்முகத் தேர்வும் நடைபெற்று வந்தது.

நேர்முகத் தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இடம்பெற்றுள்ளன.  மத்திய அரசுப் பணிகளில் குரூப்-பி பணிகளுக்கு முன்பு நேர்முகத் தேர்வு இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்முகத் தேர்வு நீக்கப்பட்டது. தற்போது குரூப்-பி பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது. ரயில்வே தேர்வு வாரியமும் குரூப்-பி பதவிகளுக்கு தற்போது நேர்முகத் தேர்வு இல்லாமல், எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணிநியமனங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசும்பெரும்பாலான குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க முடிவு செய்துள்ளது. குரூப்-2 பணிகளில் குறிப்பிட்ட ஊதிய விகிதத்துக்கு மேல் உள்ள பதவிகளுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுநடத்தவும், எஞ்சிய பெரும்பாலான பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்கவும் முடிவு செய்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேர்முகத் தேர்வு நீக்கப்படும் குரூப்-2 பணிகள், குரூப்-2-ஏ தேர்வின் கீழ் கொண்டுவரப்படும் தெரிகிறது. தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகள் நேர்முகத் தேர்வு நீக்கப்படும் பதவிகளின் பட்டியலில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.