சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை!

இந்திய சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்ட நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் மற்றும் பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, ஒண்டிவீரன் நினைவிடங்களில் தமிழக மேதகு ஆளுநர் ஆர். என்.ரவி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி நேற்று மற்றும் இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

2 ம் நாளான இன்று காலை ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கோவிந்தப்பேரி சோகோ கிராமத்தில் இருந்து புறப்பட்ட தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் அரசாட்சி செய்த இந்திய சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மன்னர் பூலித்தேவர் நினைவு மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு மன்னர் பூலித்தேவரின் வாரிசான  சிவகுமார் சாமித்துரை  தலைமையில் கிராம மக்கள் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தமிழக ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மன்னர் பூலித்தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி நினைவு மாளிகைக்குள் சென்று சுற்றிப் பார்த்தார்.

இதனைத் தொடர்ந்து பச்சேரி கிராமத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களான ஒண்டிவீரன் நினைவு ஸ்தூபி மற்றும் வெண்ணிக் காலாடி நினைவிடத்திற்கு சென்று தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி மாலை அணிவித்தும் மலர்தூவி  மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி, பா.ஜ.க. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் ஆனந்த் அய்யாச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: காவிரி கர்நாடகாவின் சொத்து அல்ல...அனைத்து மாநிலங்களுக்கும் காவிரி சொந்தம் - டி.கே.எஸ்.இளங்கோவன்